மதுரை தொகுதி மக்களிடம் கடந்த 6 மாதத்துக்கான செயல்பாட்டு அறிக்கையை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Published Date: September 10, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை: தொகுதி மக்களிடம் கடந்த 6 மாதங்களுக்கான செயல்பாட்டு அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

தான் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற மதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களை வீடு, வீடாக சந்தித்து கடந்த 6 மாத காலத்துக்கான தனது செயல்பாட்டு அறிக்கையை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இன்று முதற்கட்டமாக மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்துக்கான தமது செயல்பாட்டு அறிக்கையை வழங்கியுள்ளார்.

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, திமுக வட்டச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் அவருடன் இந்த நிகழ்ச்சியில் உடன் சென்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தொகுதி மக்களிடம் அளித்த வாக்குறுதியின்படி சட்டமன்ற உறுப்பினராக தனது செயல்பாட்டை ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வருகிறார்.

அதன்படி மதுரை சிம்மக்கல், அண்ணாமலை திரை அரங்கம் அருகே திருமலைராயர் படித்துறை, எல்என்பி அக்ரஹாரம், தைக்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செப்டம்பர் 2022 முதல் மே 2023 உள்ளிட்ட 6 மாதத்திற்கான செயல்பாட்டு அறிக்கையை வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று தொகுதி மக்களை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

 

Media: Tamilhindu.com